வேளாங்கண்ணியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 இளைஞர்களை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம், காடம்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயதான ஒரு சிறுமியை நம்பியார் நகர், அம்மன்கோயில் கிழக்குத் தெருவைச் சேர்ந்த சீ. விஜய் என்பவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி அச்சிறுமியை வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்ற விஜய் அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர், தனது நண்பர்கள் 2 பேரை விடுதிக்கு வரவழைத்து 3 பேரும் சேர்ந்து அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்தப் புகாரின் பேரில், நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த சீ. விஜய் (23), நாகூர் சம்பாதோட்டத்தைச் சேர்ந்த க. அரவிந்த் (23), சீர்காழி வட்டம், திருமுல்லைவாசல் மீனவர் தெருவைச் சேர்ந்த கு. பிரதீப் (23) ஆகிய 3 பேரையும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போஸ்கோ) தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்துக்கு உதவியாக இருந்த குற்றத்தின் கீழ் தங்கும் விடுதி மேலாளர் கி. ரமணி (50) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நாகை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.