மயிலாடுதுறை செங்கமேட்டுத் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதீப்பாய்ந்தாள் அம்மன் கோயிலில் திங்கள்கிழமை 127-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது.
மயிலாடுதுறை காவிரிக் கரையில் கணவருடன் உடன்கட்டை ஏறிய பெண்மணியை, தெய்வமாக பாவித்து தீப்பாய்ந்தாள் அம்மன் எனும் பெயரில் கோயிலில் சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அவர் நினைவாக ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, நிகழாண்டு 127-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. திங்கள்கிழமை காலை அம்பாளுக்கு விசேஷ அபிஷேக ஆராதனை மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மயிலாடுதுறை கூரைநாடு காக்கும் பிள்ளையார் கோயில் படித்துறையிலிருந்து சக்தி கரகம், அலகு காவடிகள் சுமந்த பக்தர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே கோயிலுக்கு வந்தனர்.
அங்கு தீக்குண்டத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தீமிதி திருவிழாவை தொடர்ந்து வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.