திருமருகல் ஒன்றியம், அம்பல் ஊராட்சியில் அட்மா விவசாயிகளுக்கு பழ மரங்கள் சாகுபடி மேலாண்மை குறித்து அண்மை யில் பயிற்சியளிக்கப்பட்டது.
தோட்டக் கலைத் துறை துணை அலுவலர் முத்தையா தலைமை வகித்தார். உதவி தோட்டக் கலை அலுவலர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் சிவக்குமார், பழ மரங்களில் உயர் அடர் நடவு மற்றும் கிளை படர்வு மேலாண்மைப் பயற்சியை தொடங்கி வைத்துப் பேசினார். இதில், மா சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள், ரகங்கள், மா மரத்தில் காவாத்து செய்தல், வளர்ச்சி ஊக்கி மருந்து தெளித்தல், மா மரங்களுக்கு கல்டார் இடுதல், நீர் நிர்வாகம், சொட்டு நீர் பாசனம், நீர் வழி உரமிடல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக்கூறினார். இதில் உதவி தோட்டக்கலை அலுவலர் ராமஜெயம், வேளாண்மை துணை அலுவலர் ரவிச்சந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் சுரேஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் எழிலரசன் செய்திருந்தார்.