திருக்குவளை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வெள்ளிக்கிழமை தேய்பிறை சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
அருள்மிகு இருதய கமலநாத சுவாமி கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் வலிவலத்தில் உள்ள ஸ்ரீ இரட்டை விநாயகர், ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ வெள்ளை விநாயகர் உள்ளிட்ட விநாயகர்களுக்கு தேய்பிறை சதுர்த்தியையொட்டி பால், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல், திருக்குவளையில் தருமையாதீனத்துக்கு சொந்தமான திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள ஸ்ரீ தியாக விநாயகர் மற்றும் தேரடி பிள்ளையார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.