மக்களவைத் தேர்தலையொட்டி, நாகை மற்றும் காரைக்கால் மாவட்டக் காவல் துறை மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. விஜயகுமார், காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் பன்வால், நாகை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் வி. பத்ரிநாராயணன், மதுவிலக்குப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முருகேஷ் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, இரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், சோதனைச் சாவடிகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள், ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பரிமாற்றத் தடுப்பு நடவடிக்கைகள், காவல் துறையினருக்கிடையேயான தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.