2017-2018-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடுத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் பாரதீய கிசான் சங்க விவசாயிகள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனவரி 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் மூலம் வாக்குறுதி அளிக்கப்பட்டு இது வரை நிறைவேற்றப்படாத 2017-18-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2016-17-ஆம் ஆண்டில் கடன்பெற்ற விவசாயிகளுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும், அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுப்படி செய்ய வேண்டும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு 15 நாள்களை கடந்தும் பணம் வழங்கப்படுவதில்லை, உடனடியாக பணம் வழங்க வேண்டும், சீர்காழியில் இயங்கும் கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி கள அலுவலரை இடம் மாற்றம் செய்யவேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைபடி விவசாய உற்பத்தி பொருள்களுக்கு உரிய விலையை நிர்ணயம் செய்யவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய கிசான் சங்கம் சார்பில் சீர்காழி-நாகை தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன்கோயில் ஆர்ச் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். தகவலறிந்து அங்கு வந்த வைத்தீஸ்வரன்கோயில் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் போலீஸார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, வட்டாட்சியர் ரா. சங்கர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில உத்திரவாதம் அளித்ததில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.