சீர்காழியில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகருக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சட்டநாதர் கோயில் தெற்கு கோபுர வாசல் அருகே ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இங்கு 20-ஆம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழாவையொட்டி, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு, கணபதி ஹோமம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மஞ்சள் பொடி, திரவியப் பொடி, தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பால், தயிர், பன்னீர், சந்தனம் முதலான பொருள்களைக் கொண்டும், கடத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கொண்டும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மலர்கள், அருகம்புல் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், வழிபாட்டுக்குழுவினர் மேற்கொண்டனர்.