வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவோருக்கான திறன் வளர்ப்புப் பயிற்சி முகாம் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை பெறும் திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகளுக்கு, அவர்கள் விரும்பும் துறையில் திறன் வளர்ப்புப் பயிற்சி வழங்கும் வகையில், நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி பயிற்சி முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில், பல்வேறு நிறுவனங்களின் பயிற்றுநர்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள
உள்ளனர்.
வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவோரில், விருப்பம் உள்ள இளைஞர்கள், தங்கள் வேலைவாய்ப்புப் பதிவு அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்கலாம் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.