தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், நாகை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்களுக்கான 5 நாள் பணியிடைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
மயிலாடுதுறை ஏவிசி கல்லூரியில் தொடங்கிய இம்முகாமில், 48 பள்ளிகளைச் சேர்ந்த 53 அறிவியல் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு தலைவர் என்.விஜயரங்கன் தலைமை வகித்தார். செயலர் கே. கார்த்திகேயன், முதல்வர் ஆர். நாகராஜன், சீர்காழி மாவட்ட கல்வி அலுவலர் ஏ. தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலர் கே. குமரன் கலந்துகொண்டு முகாமைத் தொடங்கி வைத்தார்.
முகாமுக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியர் பி. அன்புசீனிவாசன் மற்றும் பேராசிரியர்கள் டி.எம். சதீஷ்கண்ணன், கே. அமிர்தகணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.