சீர்காழியை அடுத்த திருவாலியில் கல்யாண ரெங்கநாத பெருமாள்- அமிர்தவல்லி தாயார் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் உத்ஸவம் மார்ச் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி, திருநகரியிலிருந்து அமிர்தவல்லி தாயாருடன் கல்யாண ரெங்கநாதப் பெருமாள் திருவாலி லெட்சுமிநரசிம்ம பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினார்.
அங்கு பெருமாள்- தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாற்றுமுறை ஆகியன நடைபெற்றன. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் நடைபெற்று மணமேடையில் பெருமாள்- தாயார் எழுந்தருளினர். சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, திருமண வைபவம், சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர், மங்கள வாத்தியங்கள் முழங்க தாயார் கழுத்தில் மங்கலநாணை பட்டாச்சாரியார்கள் அணிவித்து திருக்கல்யாணம் செய்து வைத்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.