கஜா புயலை முன்னிட்டு, திருவாரூரில் வியாழக்கிழமை மாலை முதல் பரபரப்பு நிலவியது.
சில நாள்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான கஜா புயல், கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர், நாகை, வேதாரண்யம் பகுதிகளில் கரையைக் கடக்க உள்ளது என உறுதியான தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக, திருவாரூர் மாவட்டம் இரண்டு நாள்களாக பரபரப்பாக காணப்பட்டது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, அனைத்து துறையினரையும் முடுக்கிவிட்டது. போலீஸார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினரும் தயாராகவே இருந்தனர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை வானம் மிகப் பிரகாசமாக இருந்தது. மந்தமான நிலை கூட இல்லாததால், புயல் குறித்து மக்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. எவ்வித சலனமுமின்றி மக்கள் தங்கள் பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர். எனினும், மாலை 4 மணிக்கு பிறகு நிலைமை தலைகீழானது. வானில் தோன்றிய கருமேகங்கள், எங்கும் இருண்ட சூழலை உருவாக்கின. சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தன. இதன் பிறகு உண்டான மழையால் பரபரப்பான சூழல் உண்டானது.
உடனடியாக பல்வேறு தனியார் நிறுவனங்கள், அரசு அறிவித்தபடி தொலைதூரத்தில் இருந்து பணிக்கு வரும் ஊழியர்களை உடனயாக வீட்டுக்கு அனுப்பினர்.
வேதாரண்யம் அருகே உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் அதிக அளவிலான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசித்த மக்கள், உடனடியாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.
இதேபோல் வியாழக்கிழமை மாலைக்கு பிறகு திருவாரூர் கடைவீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாகி, பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 7 மணிக்கு பிறகு பலத்த மழையும், சிறிது நேர இடைவெளிக்கு பிறகு லேசான தூறலாகவும் மழை அவ்வப்போது பெய்தபடி
இருந்தது.