குடிநீர், மின்சார வசதி செய்து தரக் கோரி, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே ஒளிமதி பிரதான சாலையில், பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
கஜா புயலின் சீற்றத்தால் நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்கள் அனைத்திலும் மின் தடை ஏற்பட்டிருப்பதால், ஜெனரேட்டர்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. எனினும், பொதுமக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலவில்லை.
இந்நிலையில், குடிநீர், மின்வசதி செய்து தரக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமையில், ஒளிமதி, பழங்களத்தூர் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், ஒளிமதி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த நீடாமங்கலம் போலீஸார் மற்றும் ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போக வைத்தனர். மறியல் காரணமாக நீடாமங்கலம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.