திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள முள்ளியாற்றில் திங்கள்கிழமை 24 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டி நகர், வேதாரண்யம் சாலை, சிங்களாந்தி, மடப்புரம், அண்ணாநகர், ஆதிரெங்கம், கட்டிமேடு, பிச்சன் ரேட்டகம் வடபாதி, பாமணி, நெடும்பலம், மடப்புரம், வேளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செப்.13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நாள்தோறும் வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தன.
அந்த சிலைகள் அனைத்தும் பிறவி மருந்தீசர் கோயில் வளாகத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அண்ணா சிலை, நீதிமன்ற சாலை, காமராஜர் சிலை, பழைய பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை வழியாக ரயில்வே கேட் அருகே முள்ளியாற்றுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. முன்னதாக, விநாயகர் ஊர்வலத்துக்கு பாஜக திருவாரூர் மாவட்டத் தலைவர் சிவா தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலர் கருப்பு (எ) முருகானந்தம், இந்து முன்னணி மாநில நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மாவட்டச் செயலர் இளசுமணி, விநாயகர் ஊர்வல பொறுப்பாளர் கணேசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.