அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் கூறினார்.
திருவாரூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார பயணக்குழு வரவேற்புக் கூட்டத்தில் பங்கேற்று, அவர் மேலும் பேசியது: இந்திய நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் பாதுகாப்பே, எழுத்துரிமை மற்றும் பேச்சுரிமை கொண்ட அரசியலைப்பு சட்டம்தான். இந்த அரசியலைப்பு சட்டத்துக்கு எதிராக மத்தியில் உள்ள மோடி அரசு செயல்படுகிறது. மத்திய அரசு கடுமையான அடக்குமுறைகளை கையாளுகிறது. நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது.
நான்கு முறை மேட்டூர் அணை நிரம்பியும் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை. கீழ்மட்டம் முதல் தலைமைச் செயலகம், அதாவது மேல்மட்டம் வரை ஊழல் தலை விரித்தாடுகிறது. மத்திய, மாநில அரசுகள் இரண்டும் அகற்றப்படவேண்டும். அதற்கான முயற்சிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் தந்தை பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது வேதனைக்குரியது. அவமதித்தவர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும். காவிரி டெல்டா கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. எனவே, கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற தமிழக அரசு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் மதக் கலவரங்களை பாஜக உருவாக்கி வருகிறது என்றார் முத்தரசன்.