திமுக முதன்மை செயலராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தனது சொந்த ஊரான மன்னார்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த டி.ஆர். பாலு, தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த தளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், ரயில்வே நிலைக்குழு முன்னாள் தலைவருமான டி.ஆர். பாலு, திமுகவில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார். இந்நிலையில், கட்சியின் முதன்மை செயலராக அண்மையில் அவர் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, மன்னார்குடிக்கு செவ்வாய்க்கிழமை வந்த டி.ஆர். பாலுவுக்கு, திமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வரவேற்பளித்தனர்.
பின்னர், அவர் ஊர்வலமாகச் சென்று பெரியார், அண்ணா, காமராஜர், அம்பேத்கர், முன்னாள் அமைச்சர் மன்னை ப. நாராயணசாமி ஆகியோரது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் பி. ராஜமாணிக்கம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, மாநில மாணவரணி துணைச் செயலர் த. சோழராஜன், நகரச் செயலர் வீரா. கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.