திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் உள்ள மகாமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமைதோறும் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வலங்கைமானில் உள்ள பிரசித்தி பெற்ற மகாமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் காவடித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் மகாமாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, வழிபாடு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், பல மாதங்களாக அம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் தங்க கவசம் அணிவிப்பதில்லை. இதனால், தங்க கவச அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அத்துடன் தங்க கவசத்தின் நிலை பற்றியும் பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எனவே, பக்தர்களின் ஐயத்தைப் போக்கும் வகையில், மகாமாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் தங்க கவசம் அணிவிக்கும் முறையை மீண்டும் பின்பற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.