நன்னிலம் வட்டம், மகிழஞ்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சப்தகன்னியம்மன் கோயிலில் மாசி மக உத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ வீர முனீசுவரர் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். மாசி மக உத்ஸவத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர் . பின்னர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர், நண்பகலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீ சப்தகன்னியம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, திங்கள்கிழமை அன்னதானமும், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு வாணவேடிக்கையுடன் ஸ்ரீ சப்தகன்னியர் வீதியுலாவும் நடைபெறவுள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டி தலைவர் ஆர். ராஜா தலைமையில் எஸ். சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன் டி. கமல்ராஜ், ஜி. தினேஷ், கோயில் அர்ச்சகர் எம். சந்திரமோகன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.