நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் குருபரிகார கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாசி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயில் நவகிரகங்களில் குருபகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் மாசி பிரதோஷ சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ஆபத்சகாயேசுவரர், ஏலவார் குழலியம்மன், நந்திகேசுவரர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, சுவாமி பிராகார உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நரிக்குடி எமனேஸ்வரர் கோயில்: இதேபோல், நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரர் கோயில், நீடாமங்கலம் காசி விசுவநாதர் கோயில், பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் மாசி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.