அரசு வழங்கும் நலத் திட்டங்களைப் பயன்படுத்தி, பயனாளிகள் தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கி அவர் பேசியது:
குடும்பப் பெண்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2000 பெண் பயனாளிகளுக்கு தலா ரூ.3,750 மதிப்பிலான 50 நாட்டுக்கோழி குஞ்சுகள் வீதம் வழங்கப்படுகிறது. தற்போது 200 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தை பயனாளிகள் பயன்படுத்திக்கொண்டு தங்களது பொருளாதாரத்தை இரட்டிப்பாக்கிக் கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் தலைமை வகித்தார். நாகை மக்களவை உறுப்பினர் கே.கோபால் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் இ. தனபாலன், வருவாய்க் கோட்டாட்சியர் முருகதாஸ் உள்ளிட்ட பலர்
பங்கேற்றனர்.