ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதசுவாமி கோயிலில் மாசி மகத் தீர்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஸ்ரீ வாஞ்சிநாதர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். ஸ்ரீயை ( மகாலட்சுமி) அடைய விரும்பி, திருமால் இத்தலத்தில் தவம் இருந்ததால் ஸ்ரீவாஞ்சியம் என பெயர் பெற்றது.
இங்கு எமதர்மராஜா, சித்திர குப்தருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. எமதர்மராஜாவே சுவாமிக்கு வாகனமாக உள்ளார். எம பயம் நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. கங்காதேவி 999 கலைகளுடன் இங்குள்ள திருக்குளமான குப்த கங்கையில் ரகசியமாக உறையும் தலம்.
இத்தகைய சிறப்புபெற்ற இக்கோயிலில் மாசி மக பிரம்மோத்ஸவம் பிப்ரவரி 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான மாசி மகத் தீர்த்தவாரி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, காலை 8 மணியளவில் பிச்சாண்டவர் புறப்பாடும், 9 மணியளவில் ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ நடராஜர் திருவீதி எழுந்தருளி, குப்த கங்கையில் தீர்த்தவாரியும் நடைபெற்றது.
பகல் 11 மணியளவில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, குப்தகங்கையில் மாசி மகத் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.