திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த சிறப்பு முகாம் பிப்ரவரி 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.31-இல் வெளியிடப்பட்டது. மேலும் 1.1.2019 இல் 18 வயது நிறைவடைந்து, இதுவரை வரை வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பிப்ரவரி 23,24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
அதன்படி 1.1.2019 இல் 18 வயது நிறைவடைந்தவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் மார்பளவு வண்ண புகைப்படம், வயதுக்கான ஆதாரம், இருப்பிடத்துக்கான ஆதாரம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
உயிரிழந்த அல்லது வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்த வாக்காளரது பெயரை நீக்கம் செய்வதற்கு படிவம் 7, திருத்தம் செய்ய படிவம்-8, ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் இடமாற்றம் செய்வதற்கு படிவம் 8 ஏ ஆகியவற்றை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் அதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அளிக்கலாம். வாக்காளர் பட்டியல்களை elections.tn.gov.in வலை தளத்திலும் காணலாம். மேலும் www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். பொது மக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.