திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், தென்குவளைவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் செயற்கைக்கோள் ஏவுகணை மாதிரியை வடிவமைத்து, அதை மாணவர்கள் சனிக்கிழமை பறக்கவிட்டனர்.
இப்பள்ளியின் சமூக அறிவியல் மன்ற பொறுப்பாளரும், ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் தலைமையில், 9-ஆம் வகுப்பு மாணவர்கள் சேரன் செங்குட்டுவன், வசந்த், அருண், ஆதித்யன், அரவிந்தன், பிரவீன், மாணவியர் அருள்சக்தி, தீபலட்சுமி, ஜனப்பிரியா, சினேகா, ரஞ்சிதா ஆகிய 11 பேர் அடங்கிய குழுவினர் மாதிரி செயற்கைக்கோள் ஏவுகணை ஒன்றை வடிவமைத்தனர்.
இந்த செயற்கைக்கோள் ஏவுகணையை இயக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. அதன்படி, ஏவுகணையில் திரவ எரிபொருள் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏவுகணையை பறக்கவிடும் பணிகள் தொடங்கின. ஓர் அடி உயரத்தில் தயாரிக்கப்பட்ட சிறிய ராக்கெட்டில், திரவ எரிபொருள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ராக்கெட் 10 அடி உயரம் பறந்துசென்று கீழே விழுந்தது. ராக்கெட் பறந்ததைக் கண்டு மாணவர்களும், ஆசிரியர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதுகுறித்து வழிகாட்டி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் கூறியது: மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், விண்வெளி பற்றிய ஆர்வத்தைத் தூண்டவும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். மாதிரி செயற்கைக்கோள் ஏவுகணையில் சமையல் சோடாவையும், சிட்ரிக் அமிலத்தையும் தண்ணீருடன் கலந்து எரிபொருளாக பயன்படுத்தி வெற்றி கண்டோம். ராக்கெட் மேல்நோக்கி பறப்பதற்கான இயற்பியல் தத்துவத்தை இந்த நிகழ்வின் மூலம் மாணவர்கள் கற்றுக்கொண்டனர் என்றார் அவர்.
இதுபற்றி மாணவர்கள் கூறும்போது, எதிர்காலத்தில் இதை விட பெரியதாக, இன்னும் உயரமாக பறக்கக் கூடிய ஏவுகணையைத் தயாரிப்பதற்கான உத்வேகத்தை இந்நிகழ்வு அளித்தது என்றனர்.
செயற்கைக்கோள் ஏவுகணை தயாரித்த மாணவர்களையும், வழிகாட்டி ஆசிரியரையும் தலைமை ஆசிரியர் ஐரின் பிரபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.