திருவாரூரில் நடைபெறும் திருமுறை பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவாவடுதுறை ஆதீனத்தின் திருவாரூர் மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
திருவாவடுதுறை ஆதீனத்தால் நடத்தப்படும் திருமுறை பயிற்சி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்கிறது. தமிழ் இசையின் பெருமையையும், தேவார, திருமுறைகளை பண் அமைப்போடு பாடும் முறையையும் அனைவரும் கற்கும் வகையில் திருவாவடுதுறை ஆதீன குரு மகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் அருளாசியுடன் தமிழகமெங்கும் 79 திருமுறைப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு, நடைபெற்று வருகின்றன. ஒரு தொகுப்பு, இரண்டாண்டுகள் என நடைபெறும் பயிற்சித் தொகுப்பு வகுப்புகள், இதுவரையில் 5 நிறைவு பெற்றுள்ளன. 2019- 2020- ஆம் ஆண்டுக்கான 6-ஆம் தொகுப்புக்கு மாணவர் சேர்க்கை இம்மாதம் (ஜனவரி) தொடங்கியிருக்கிறது. சிறந்த இசைவாணர்களான ஓதுவா மூர்த்திகளின் மூலம் பாடுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் திருவாரூர் மையத்தில் சேர்வதற்கு 94 86334052, 9944574126, 9842465655 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மாதந்தோறும் நடைபெறும் பயிற்சி வகுப்பின் தகவல்கள், மாணவர்களுக்கு குறுஞ்செய்திகள் வாயிலாக தெரிவிக்கப்படும். இப்பயிற்சியில் மீண்டும் சேர 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.