பாதுகாப்புத் தளவாட உற்பத்தியை தனியார்மயமாக்கி, அதன் தொழிற்சாலைகளை மூட திட்டமிடும் மத்திய அரசுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (நவ.13) மதிய உணவு புறக்கணிப்புப் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனம் (ஏஐடிஇஎஃப்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச் செயலர் சி. ஸ்ரீகுமார் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாஜக தலைமையிலான மத்திய அரசு, பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் சுமார் 275 பொருள்களைத் தனியாரிடம் 2019-ஆம் ஆண்டு முதல் ஒப்படைக்க தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தின் ஆவடி, திருச்சி, ஊட்டி -அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு பாதுகாப்புத் துறை உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்பட நாடெங்கிலும் உள்ள 41 பாதுகாப்பு உற்பத்தித் தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 1 லட்சம் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைக் கண்டித்து போராட்டமும் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.