தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி) பகுதிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி வீதிகளில் குதிரை வண்டி ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்டிஎம்சி அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரவு நேர கேளிக்கைகள், விருந்துகளுக்காக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதால் மக்கள் பாதிப்படைவதாகப் புகார்கள் கிடைக்கப் பெற்றன. இதைத் தொடர்ந்து, இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறுபவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்.
மேலும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது, சாலைகளில் குதிரை வண்டியில் ஊர்வலம் செல்வதை சில சமுதாயத்தினர் வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து, எஸ்டிஎம்சி பகுதிகளில் சாலைகளில் குதிரை வண்டி ஊர்வலங்களை நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றனர்.