1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் நரேஷ் ஷெராவத், யஷ்பால் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராகல் சத்தா சனிக்கிழமை கூறியதாவது: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் போன்ற மதக் கலவரங்கள் இந்திய சமூக அரசியல் வரலாற்றைச் சிதைத்துள்ளன. சமூகத்தைத் தேர்தலுக்காகப் பிரிக்கும் வகையில், இதுபோன்ற கலவரத்தை அரசியல்வாதிகள் தூண்டி விடுகின்றனர். மனிதகுலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற அரசியல்வாதிகளைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும்.
இந்நிலையில், 1984-இல் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் நரேஷ் ஷெராவத், யஷ்பால் சிங் ஆகியோர் குற்றவாளிகள் என தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த புதன்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது. இது வரவேற்கும் வகையில் உள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை முன்னின்று நடத்தியவர்களும், கலவரத்துக்குப் பொறுப்பானவர்களும் தண்டிக்கப்பட்டு, சிறைக்குச் செல்ல வேண்டும் என்றார் அவர்.