காஜியாபாதில் உள்ள ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் போலீஸார் திங்கள்கிழமை நடத்திய என்கவுன்ட்டரில் பாவாரியா கும்பலைச் சேர்ந்து இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் போலீஸார் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் ரகசிய தகவலின் அடிப்படையில் ஷாஹினி கேட் காவல் துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிலர் காவல் துறையினரைக் கண்டதும் தப்பிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு காவல் துறையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது, இருவரின் கால்களில் குண்டு பாய்ந்தது. மேலும் மூவர் தப்பி ஓட்டிவிட்டனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காவலர் ரவி என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் குண்டடிப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பாவாரியா கும்பலைச் சேர்ந்த மோனு, சூரஜ் என்பது தெரியவந்தது.
காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோனு, சூரஜ் ஆகிய இருவருக்கும் சோனிபத், ஃபரீதாபாத், புலேந்தசேர், நொய்டா, காஜியாபாத் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்பு உள்ளதை அவர்களே ஒப்புக் கொண்டனர். தப்பி ஓடிய மூவரை தேடி வருகிறோம் என்று போலீஸார் தெரிவித்தனர்.