பொதுமக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை தலைவர்களுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார். பொது மக்கள் புகார் கண்காணிப்பு திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக துறைகளின் தலைவர்களுடன் முதல்வர் கேஜரிவால் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் துறைத் தலைவர்கள் விளக்கம் அளித்தனர்.
பின்னர் கூட்டத்தில் முதல்வர் கேஜரிவால் பேசுகையில், "மக்கள் நலன்களைப் பாதுகாக்க தில்லி அரசு உறுதி ஏற்றுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அளிக்கும் புகார் தொடர்பாக உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். எந்தவொரு புகாரும் நிலுவையில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பாக அந்தந்தத் துறை தொடர்பாக ஒவ்வொரு துறையின் தலைவரும் உறுதி செய்ய வேண்டும். புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக எழும் அதிருப்தியைக் குறைக்க வேண்டும். பொதுமக்கள் புகார் கண்காணிப்பு திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக மாதத்துக்கு இருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். அடுத்த ஆய்வுக் கூட்டம் டிசம்பர் 17-ஆம் தேதி நடைபெறும்' என்றார்.