தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பெரியார் பிறந்த தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, பள்ளி முதல்வர்கள் ஹரிகிருஷ்ணன் (மோதிபாக்), சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணாபுரம்), காயத்ரி (மந்திர் மார்க்), சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு-பூசா சாலை), ரஞ்சன் குப்தா (முதல்வர் பொறுப்பு - ஜனக்புரி) ஆகியோர் பெரியாரின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களின் உரை இடம் பெற்றது. மோதிபாக் பள்ளியில் பெரியாரின் கொள்கைகளை பதாகைகள் மூலம் மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். மேலும், ஜாதி, மதம், இன வேறுபாடின்றி அனைவருடன் பழகி ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர்.