டி.யு. தேர்தலுக்கு எதிரான வழக்கு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க உத்தரவு

தில்லி பல்கலைக்கழக (டி.யு.) மாணவர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக

தில்லி பல்கலைக்கழக (டி.யு.) மாணவர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது முறைகேடு நடைபெற்றதாக என்எஸ்யுஐ தொடுத்த வழக்கில், வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்க தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான என்எஸ்யுஐயின் வேட்பாளர்கள் சன்னி சில்லர், மீனா, சௌரப் யாதவ் ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில், "கடந்த 12ஆம் தேதி நடைபெற்ற தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இந்த இயந்திரங்களை தில்லி பல்கலைக்கழகம் தனியாரிடம் இருந்து பெற்றுள்ளதாக தில்லி தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளர்.  தனியாரிடம் இருந்து எப்படி வாக்குப் பதிவு இயந்திரங்கள் பெற முடியும். 7 இயந்திரங்களில் பதிவான தகவல்கள் காணாமல் போய் உள்ளன. 
ஆகையால்,  வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் ரவீந்தர பட், ஏ.கே. சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் என்எஸ்யுஐ மாணவர் அமைப்பினர் சார்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இன்றைய விசாரணைக்கு இந்த மனு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த நீதிபதி சித்தார் மிர்துல் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
தில்லி பல்கலைக்கழக தேர்தலில் பதிவான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்களையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகத்தின் தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையம், தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று ஏபிவிபி வேட்பாளர்கள் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி பல்கலைக்கழகத்துக்கு கடந்த 12ஆம் தேதி மாணவர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. 52 மையங்களில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 
பதிவான வாக்குகள் 13ஆம் தேதி எண்ணப்பட்டன. அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக கூறி, வாக்கு எண்ணிக்கை 3 மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம்தான் வழங்கியது என்று வெளியான தகவலை தில்லி தலைமை தேர்தல் அதிகாரி மறுத்தார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தில்லி பல்கலைக்கழக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தேர்தல் ஆணையம் வழங்கவில்லை. தேர்தல் ஆணைத்திடம் இதுபோன்ற இயந்திரங்களே இல்லை. அந்த இயந்திரங்களை தில்லி பல்கலைக்கழகம் தனியாரிடம் இருந்து பெற்றிருக்கலாம்' என்று தெரிவித்திருந்தார்.
பின்னர் மீண்டும் தொடங்கிய வாக்கு எண்னிக்கையில் தலைவர், துணைத் தலைவர், செயலர் ஆகிய பதவிகளை ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது. 
என்எஸ்யுஐ மாணவர் சங்கம் இணைச் செயலர் பதவியை மட்டும் கைப்பற்றியது. இடதுசாரி கட்சியின் ஆதரவு பெற்ற ஏஐஎஸ்ஏ மாணவர் சங்கத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் சங்கமான சிஒய்எஸ்எஸ் ஒரு பதவியில் கூட வெற்றி பெறவில்லை. 
மொத்தம் 8 வேட்பாளர்களே போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 10-வது வேட்பாளருக்கு 40 ஓட்டுகள் பதிவாகி இருந்ததாகவும், 7 வாக்குப் பதிவு இயந்திரங்களின் ஓட்டுகள் எண்ணப்படவில்லை எனவும் என்எஸ்யுஐ குற்றம்சாட்டியிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com