நொய்டாவில் உள்ள கெளதம் புத் நகரில் கொள்ளையில் ஈடுபட முயன்ற மூவரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கெளதம் புத் நகரில் தன்கெளர் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட டெலிகர்க் பகுதியில் கொள்ளையில் ஈடுபட மூவர் திட்டமிட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதில் டெலிகர்க் பகுதியில் மகேந்திர கா பாக்கில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் தன்கூர் பகுதியைச் சேர்ந்த ரஷீத், அமித், தேவேந்திரா என அடையாளம் காணப்பட்டது. அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் அப்பகுதியில் கொள்ளையில் ஈடுபட முயன்றது விசாரணையில் தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.