முத்தலாக்கை தடை செய்யும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி பாராட்டு தெரிவித்துள்ளார்.
முத்தலாக் முறைக்கு எதிரான அவசரச் சட்டத்துக்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், 3 முக்கிய திருத்தங்களுடன் இந்த முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த முடிவை தில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக தில்லியில் புதன்கிழமை அவர் கூறியதாவது:முத்தலாக் முறை, பெண்களை அடிமைப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். இதை இல்லாமல் செய்ய மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் பாராட்டுகின்றனர். முத்தலாக் அரசியல் அமைப்புக்கும் பெண்களின் உரிமைகளுக்கும் எதிரானது என்றார்.
இந்நிலையில், தில்லி பாஜக சிறுபான்மைப் பிரிவு பொறுப்பாளர் ஆதிஃப் ரசீத், தலைவர் மொஹமத் ஹரூண் ஆகியோர் தில்லி பாஜக செயலர் குல்ஜீத் சிங் சாகலைச் சந்தித்து முத்தலாக்குக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டதாக தில்லி பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.