சுனந்தா புஷ்கர் வழக்கு: சசிதரூருக்கு சில ஆவணங்களைஅளிக்க போலீஸுக்கு உத்தரவு

சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் அவரது கணவரும், காங்கிரஸ் கட்சியின்

சுனந்தா புஷ்கர் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் அவரது கணவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சசி தரூருக்கு சில ஆவணங்களை அளிக்கும்படி தில்லி போலீஸாருக்கு அங்குள்ள நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கு, தில்லியில் உள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சசி தரூர் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் பவா, தில்லி போலீஸாரால் அளிக்கப்பட்ட சில ஆவணங்கள் படிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், அந்த ஆவணங்களில் பல பக்கங்களை காணவில்லை என்றும் குறிப்பிட்டார். இதைக் கேட்ட நீதிபதி சமர் விஷால், சசி தரூர் கேட்கும் சில ஆவணங்களை, அவருக்கு அளிக்கும்படி தில்லி போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
இதேபோல், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி சசிதரூர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையேற்று, சசிதரூருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன்பின்னர், வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் மாதம் 4ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், தில்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கில், சசிதரூருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜூன் மாதம் சம்மன் அனுப்பியது. இதையேற்று, நீதிமன்றத்தில் ஆஜரான சசிதரூருக்கு நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 7ஆம் தேதி ஜாமீன் அளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com