ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறி வருகிறார் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். அரசியல் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பேசும்போது, "ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது; 12 தொழிலதிபர்களின் ரூ.2.5 லட்சம் கோடி வாராக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்து விட்டது' என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அவரது குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக, ஜேட்லி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
ரஃபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, வாராக்கடன் தொகை, ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், உண்மைகளை அவர்கள் மூடி மறைத்து விட்டனர். மேலும், கடன் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் நிதி மோசடியாளர்கள் காப்பாற்றப்பட்டனர். கடந்த 2015-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சொத்து தர மதிப்பீட்டுக் குழு, வாராக் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போதுதான், நாட்டின் உண்மையான வாராக்கடன் ரூ.8.96 லட்சம் கோடி என்று தெரிய வந்தது. இந்த வாராக்கடன் அதிகரிப்புக்கு தற்போதைய மத்திய அரசு காரணமல்ல. மேலும், வாராக்கடனை வசூலிப்பதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு முறையாக தவணைத் தொகைகள் செலுத்தப்பட வேண்டும். 90 நாள்களுக்கு மேல் கடன் நிலுவை செலுத்தப்படாவிட்டால், அந்தக் கடன் வாராக்கடனாகக் கருதப்படும். மோசடியாளர்களின் சொத்துகளை ஏலம் விட்டு கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பதற்காக, வங்கி திவால் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், 12 முக்கிய கடனாளிகளை ரிசர்வ் வங்கி கண்டறிந்துள்ளது. பல்வேறு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன் நிலுவை, வட்டியுடன் சேர்த்து ரூ.3 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறுவதால், யதார்த்த உண்மைகளை அவரால் மாற்ற முடியாது என்றார் ஜேட்லி.