அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: துப்புரவுத் தொழிலாளி கைது

வடமேற்கு தில்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமியை பாலியல்


வடமேற்கு தில்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அந்த மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:
அந்தச் சிறுமி, கூர்மையான ஒரு பொருளை உள்கொண்டதை அடுத்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி பொது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிறுமி இருந்து வந்தார்.
சிறுமியை தொடர்ந்து கண்காணித்து வந்த மருத்துவமனையின் துப்புரவுத் தொழிலாளி ராதே ஷியாம் (40), சிறுமியின் தாய் அயர்ந்து தூங்கும்போது வார்டுக்குள் நுழைந்துள்ளார். பின்னர் சிறுமியை தூக்கிச் சென்று குளியலறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இச்சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த சிறுமி, பின்னர் தனது வார்டுக்கு வந்துள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரது தாய் சப்தம் போட்டுள்ளார். அப்போது தப்பிச் செல்ல முயன்ற ராதே ஷியாம் பிடிபட்டார். அவர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டார்.  அவரை கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அச்சிறுமியை ராதே ஷியாம் பின் தொடர்ந்துள்ளார். எப்படியாவது அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட வேண்டும் என சரியான நேரத்துக்காக காத்திருந்துள்ளார். அப்போதுதான் வெள்ளிக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிகாரை சேர்ந்த ராதே ஷியாம், திருமணமானவர். அவர் மட்டும் தில்லியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். அவரது குடும்பத்தினர் பிகாரில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளராக  கடந்த இரண்டு வருடமாக அவர் வேலை பார்த்து வருகிறார். இச்சம்பவம் குறித்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அச்சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தற்போது சிறுமி நன்றாக உள்ளார்.  சிகிச்சை முடிந்த பிறகு கவுன்சிலிங் பெறுவதற்காக சிறுமி அனுப்பிவைக்கப்படுவார்.
ராதே ஷியாம் குறித்து சக ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, ராதே ஷியாம் பெரிய அளவில் யாருடனும் பழகாதவர் எனத் தெரிய வந்தது. எப்போதாவதுதான் சக ஊழியர்களுடன் பேசுவார் என்றும் இரவு நேரங்களில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதியில் அவர் சுற்றித்திரிவார் என்றும் தெரிய வந்தது என அந்த அதிகாரி தெரிவித்தார்.
மற்றொரு சம்பவம்: தெற்கு தில்லி, பதேபூர் பெரி பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக அவரது தந்தையின் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து காவல்துறை உயரதிகாரி சனிக்கிழமை கூறியதாவது: தெற்கு தில்லியில் உள்ள பதேபூர் பெரியில் குடும்பத்துடன் வசித்து வரும் அச்சிறுமியை, தனது சகோதரி சந்திக்க விரும்புவதாகவும் அதனால் தன்னுடன் வரும்படியும் வியாழக்கிழமை 10.30 மணியளவில்  பக்கத்து வீட்டுக்காரர் கூறியுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். அவரது சகோதரி சிறுமியின் தோழியாவார். மேலும், அவர் சிறுமியின் குடும்பத்துக்கு மிகவும் அறிமுகமானவர்.
இதனால், தந்தையின் நண்பரான அவருடன் அச்சிறுமி  வியாழக்கிழமை சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டில் யாரும் இல்லாதது அறிந்து சிறுமி அதிர்ச்சி அடைந்தார். அப்போது, சிறுமியை  அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து அச்சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது தந்தை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அச்சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர் என்றார் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com