தலைநகர் தில்லியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பரவலாக தூறல் மழை பெய்தது. இதையடுத்து, காலையில் இருந்து புழுக்கத்தில் தவித்து வந்த மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.
தில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் பருவமழையின் தாக்கம் இருந்து வந்தது. இதனால், தில்லி, தேசியத் தலைநகர் வலயப் பகுதி ஆகியவற்றில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வந்தது. ஆனால், கடந்த சில தினங்களாக வானம் அவ்வப்போது மேகம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை ஏதும் பெய்யவில்லை. வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டதால், மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், புழுக்கமும் நிலவியது. இதைத் தொடர்ந்து, வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, வெள்ளிக்கிழமை பிற்பகலில் நகரில் பல்வேறு இடங்களில் பரவலாக தூறல் மழை பெய்தது. இதனால், வானிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டது. மேலும், காற்றும் வீசி வந்தது. காலையில் காற்றில் ஈரப்பதத்தின் அளவு 79 சதவீதமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட ஒரு டிகிரி உயர்ந்து 25.8 டிகிரி செல்சியஸாக இருந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (செப்டம்பர் 22) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இடி, மின்னலுடன் ஆங்காங்கே லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.