தில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3-இல் உள்ள தமிழர் நலக் கழகத்தின் 11-ஆம் ஆண்டு வருடாந்திர பொதுக் குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயூர் விஹார்-3-இல் உள்ள பாக்கெட் ஏ- 3 வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு அவ்வமைப்பின் தலைவர் ஆறு.சுப்பையா தலைமை வகித்தார். பொதுச் செயலர் க. சிங்கத்துரை வரவேற்றார். பொதுக் குழுவில் பொருளாளர் பாஸ்கரன் 2017-18 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு - செலவு கணக்கு, இருப்பு நிலைக்குறிப்புப் பட்டியலை சமர்ப்பித்தார். விவாதத்திற்கு பின் அவை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளபட்டது.
இதைத் தொடர்ந்து, மகளிர் குழு உருவாக்கம், செயற்குழு விரிவாக்கம் உள்பட பல்வேறு தீர்மானங்களுக்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. பி.சந்திரசேகர் இணைச் செயலராக ஒருமனதாகத் தேர்தெடுக்கப்பட்டார். இக்கூட்டத்தில் தமிழர் நலக் கழகத்தின் முக்கியச் செயல்பாடுகளான இலவச தமிழ் வகுப்புகள், பாரதியார் விழா, பொங்கல் விழா, காந்தி ஜெயந்தி, குழந்தைகள் தின விழா உள்ளிட்ட வற்றுக்காக மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு ஏற்கப்பட்டன. உபதலைவர் கலியப்பெருமாள் நன்றி கூறினார். இத்தகவலை தமிழர் நலக் கழகத்தின் தலைவர் ஆறு. சுப்பையா தெரிவித்துள்ளார்.