துறைசார் திட்டங்களை செயல்படுத்துவதற்கு முன்பு ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களின் கருத்துகளைப் பெறுமாறு தில்லி அரசுத் துறைகளின் முதன்மைச் செயலர்கள், செயலர்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தில்லி அரசின் நிதித் துறை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள அலுவல் குறிப்பாணையில், திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களை ஈடுபடுத்தும் நடைமுறையைக் கடைப்பிடிக்குமாறு துறைகளின் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், நிதி உருவாக்கல், செலவின மேலாண்மை, கொள்முதல், ஒப்பந்தம், முன்மொழிவுகள் பரிசீலனை உள்ளிட்ட விஷயங்களில் ஆலோசகர்களின் கருத்துகளை துறைத் தலைவர்கள் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய விதிகளின்படி ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களின் (ஐஎஃப்ஏ) கருத்துகளை கேட்டறியாமல் முன்மொழிவுகள் நிதித் துறைக்கு அனுப்பப்படுவது குறித்து நிதித் துறையின் கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதித் துறையின் முதன்மைச் செயலர் ரேணு சர்மா அனுப்பியுள்ள அலுவல் குறிப்பாணையில் தெரிவித்திருப்பதாவது:
ஐஎஃப்ஏவின் பொறுப்புகள், பங்கு குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு தகவல் தொடர்புகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி அதிகாரி விதிகள், 1978-லிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், துறைகளின் அனைத்து முன்மொழிவுகளிலும் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அனைத்து நிர்வாகச் செயலர்கள் இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், அனைத்து முன்மொழிவுகளும் நிதித் துறைக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பரிசீலிப்பதற்கான பொறுப்பு ஐஎப்ஏவை சார்ந்ததாகும். உரிய விதிகளுடன் முன்மொழிவு தொடர்பான பரிந்துரையை இந்த ஆலோசகர்கள் அளிப்பார்கள்.
அதேபோன்று, செலவின மேலாண்மைக்கான பொறுப்பு தொடர்ந்து ஐஎஃப்ஏவை சார்ந்ததாக இருக்கும். திட்டங்களை உருவாக்கும் விஷயத்திலும் ஒருங்கிணைந்த நிதி ஆலோசகர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும். பட்ஜெட் தயாரிப்பதற்கான அட்டவணையையும் அவர்கள் உறுதிப்படுத்தலாம். அவ்வப்போது பிறப்பிக்கப்படும் அறிவுத்தலின்படி பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.