வேலை வாங்கித் தருவதாக வெளி மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து விற்றதாக தில்லியில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கணவரைத் தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து தில்லி காவல் துறையினர் தெரிவித்ததாவது:
தில்லியைச் சேர்ந்தவர் பிரமா மின்ஞ் முனி (42). இவரது கணவர் ரோஹித் முனி. இருவரும் தேசியத் தலைநகர் வலயப் பகுதியில் கடத்திவரப்பட்டு மீட்கப்படும் பெண்களுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.
இவர் வேலை வாங்கித் தருவதாக ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களைக் கடத்தி வந்து விற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இவரைத் தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பஞ்சாபி பாகில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பழங்குடியினர் நலனுக்கான நிகழ்ச்சியில் பிரமா மின்ஞ் முனி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஜார்க்கண்ட் மாநில போலீஸார் தில்லி காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
அவரது கணவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தில்லியிலும் பிரமா மின்ஞ் முனிக்கு எதிராக 2013-இல் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் கைது செய்யப்பட்டுள்ள பிரமா மின்ஞ் முனி ஜார்க்கண்ட் மாநில போலீஸாரிடம் மேல்விசாரணைக்காக ஒப்படைக்கப்பட உள்ளதாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.