கையால் மலம் அள்ளும் பணித் தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜீந்தர் பால் கெளதம் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதா
வது:
கையால் மலம் அள்ளும் பணியை முற்றிலுமாக ஒழிக்க தில்லி அரசு தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பான பிரதேச அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அண்மையில் மலக் குழியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 6 துப்புரவுப் பணியாளர்கள் உயரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தில்லி முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், தங்களது மாவட்டத்தில் உள்ள கையால் மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் குறித்த விவரங்களை சேகரிக்கவும் ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு மாவட்டத்தில் கையால் மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் இல்லை என அறிக்கை அளிக்கப்பட்ட பிறகு, அந்த மாவட்டத்தில் கையால் மலம் அள்ளும் துப்புரவுப் பணியாளர்கள் யாரேனும் பணியின் போது உயிரிழந்தால் அந்த மாவட்ட ஆட்சியர் பொறுப்பாளியாக்கப்படுவார்.
மலக் குழியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி அண்மையில் உயிழந்த துப்புரவுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கும், இப்பணியில் தொடபுடைய துப்புரவுப் பணியாளர்களின் புனர்வாழ்வுக்கும் தேவையான திட்டத்தை ஒரு வாரத்தில் உருவாக்குமாறு தில்லி தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் நலத் துறைச் செயலருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில் பலியான துப்புரவுப் பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தேவையான நிதி உதவியை அளிக்கவும், இந்த விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது அபராதம் விதிக்கவும் சார் கோட்டாட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் உள்ள 3 மாவட்டங்களில் கண்டறியப்பட்டுள்ள மலம் அள்ளும் பணியைச் செய்து வரும் 45 பேருக்கு சிவில் பாதுகாப்புப் படையில் வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் ராஜீந்தர் பால் கெளதம்.