மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படும் வகையில் ஹைடிராலிக் லிப்ட் வசதியுடன் கூடிய 500 சாதாரண பேருந்துகளை தில்லி அரசு கொள்முதல் செய்வதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
தாழ்தளப் பேருந்துகளுக்கு பதிலாக, லிப்ட் வசதிக் கொண்ட 2000 சாதாரண பேருந்துகள் வாங்கும் தில்லி அரசின் நடவடிக்கைக்கு தடை கோரி மாற்றுத்திறனாளி நிபுன் மல்கோத்ரா தாக்கல் செய்திருந்த மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவி கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசு 500 சாதாரண பேருந்துகள் வாங்குவதற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக பதிலளிக்க தில்லி அரசுக்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக, தில்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், "லிப்ட் வசதியுடன் கூடிய 1000 சாதாரண பேருந்துகளை வாங்க தில்லி அரசு ஏலம் அறிவித்து பணிகளைத் தொடங்கியுள்ளதாலும், பொது போக்குவரத்து சேவையை ஊக்குவிப்பதற்காகவும் தில்லி அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது' என்று மனு தள்ளுபடி செய்யப்பட்டது.