கரோல் பாக் பகுதியில் 30 ஹோட்டல்களின் சுகாதார உரிமங்களை ரத்து செய்து வடக்கு தில்லி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள அர்பித் ஹோட்டலில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்ததையடுத்து, 71 ஹோட்டல்களின் தீப் பாதுகாப்பு உரிமங்களை ரத்து செய்து தில்லி அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்நிலையில், வடக்கு தில்லி மேயர் ஆதேஷ் குப்தா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அர்பித் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து வடக்கு தில்லி மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீப் பாதுகாப்பு உரிமங்கள் மீரப்பட்டதே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இதனிடையே, கரோல் பாக் பகுதியில் 57 ஹோட்டல்களில் சுகாதார உரிமங்கள் மீறப்படுவதாக புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி 30 ஹோட்டல்களின் சுகாதார உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன என்றார்.