குருகுலம் பவுண்டேஷன் சார்பில் "ஸ்வர் சங்கம்' எனும் நிகழ்ச்சி தில்லித் தமிழ்ச் சங்கத்தில் பிப்ரவரி 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
முதல் நாளில் குருகுலம் பவுண்டேஷன் மாணவர்களின் வயலி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பக்கவாத்தியக் கலைஞர்களாக சங்கரராமன் (மிருதங்கம்), மன்னை என். கண்ணன் (கடம்) பங்கேற்றனர். தொடர்ந்து, இசைக் கலைஞர் கன்யாகுமாரி பங்கேற்ற வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்கவாத்தியக் கலைஞர்கள் ரங்கன் (வயலின்) ஸ்ரீமுஷ்னம் ராஜா ராவ் ( மிருதங்கம்), மன்னை என். கண்ணன் (கடம்) ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு வர்த்தக அமைச்சக சிறப்புச் செயலர் என். சிவசைலம் தலைமை வகித்தார்.
சிசிஆர்டி இயக்குநர் ரிஷி வசிஸ்ட், கமலா சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். பிப்ரவரி 17-ஆம் தேதி டாக்டர் டி.வி. கோபாலகிருஷ்ணனின் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது கர்நாடக சங்கீதத்தின் நுணுக்கங்களை ஆங்காங்கே எடுத்துரைத்தார். பக்கவாத்தியக் கலைஞர்களாக வி.வி.எஸ். முராரி (வயலின்), ஆம்பூர் யு. பத்மநாபன் (மிருதங்கம்) ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்கு மத்திய ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறை செயலர் பி.ராகவேந்திர ராவ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக மூத்த அறிவியல் அதிகாரி டாக்டர் எம்.துவாரகாநாத், கோபிநாத் சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநர் ஆர்.எஸ். ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இசை ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.