வேட்பு மனு படிவத்தில் கையெழுத்திட தடை கோரிய வழக்கு: ஓபிஎஸ்-இபிஎஸ் பதில் அளிக்க உத்தரவு

வேட்பு மனு ஏ, பி படிவங்களில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட தடை

வேட்பு மனு ஏ, பி படிவங்களில்  அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட தடை கோரி கே.சி. பழனிச்சாமி தொடர்ந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி (ஓபிஎஸ்-இபிஎஸ்) ஆகியோர்   பதில் அளிக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கே. சி. பழனிச்சாமி தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடர்ந்தார். அதில், 2017, செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுவில் யாருடைய கருத்தையும் கேட்காமல் அதிமுக விதிகள் திருத்தப்பட்டன. அதிமுக சட்ட விதி 43-இன்படி விதிகளைத் திருத்த பொதுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுச் செயலாளர் நியமனம் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படும். இதன்படி, தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும்.
எனவே, மக்களவைத் தேர்தலில் வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களில் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கையெழுத்து இடுவதற்கு தடை விதிக்க வேண்டும். ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடும் வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களை நிராகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 
இந்த வழக்கு விசாரணை தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யோகேஷ் கண்ணா அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. கே.சி. பழனிச்சாமி சார்பில் மூத்த வழக்குரைஞர் ஹரிஹரன் ஆஜராகி, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள கோரிக்கையை எடுத்துரைத்தார். இதையடுத்து, இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம், எதிர்மனுதாரர்கள் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை மே 13-ஆம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com