மத்திய தில்லி, கரோல் பாக் பகுதியில் பாழடைந்த கட்டடத்தின் ஒரு பகுதி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த விபத்து தொடர்பாக இரவு 8 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அதன் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஒரு பெண் உள்பட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் யாருக்கும் காயமேற்படவில்லை' என்றார் அவர். கரோல் பாக் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் தனியார் ஹோட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 17 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் சனிக்கிழமை கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.