சுய விளம்பரத்துக்கு அரசு பணத்தை பயன்படுத்துவதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது தில்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், செலவினங்கள் குறித்து தில்லி மக்கள் கேள்வி எழுப்பும் போது அவர் தனது பொறுப்பை தட்டி கழிக்க முடியாது எனவும் ஷீலா தீட்சித் தெரிவித்தார்.
இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சுய விளம்பரங்களுக்கு அரசின் பணத்தை கோடிக்கணக்கில் செலவிட்டு வருகிறார். குறிப்பிடும்படியான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தாமலே, சாதனைகள் புரிந்ததாக தில்லி அரசு விளம்பரம் செய்து வருகிறது. இதை துணைநிலை ஆளுநர் தடுக்க வேண்டும். விளம்பரங்களுக்கு செலவிடுவதற்குப் பதில், வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். விளம்பரங்களுக்கு செலவிடப்படும் வீண் தொகை குறித்த காங்கிரஸின் கேள்விக்கு முதல்வர் கேஜரிவால் பதில் அளிக்கவில்லை. இந்தக் கேள்வியை தில்லி மக்கள் கேட்கும் போது தனது பொறுப்பை அரவிந்த் கேஜரிவால் தட்டிக் கழிக்க முடியாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.