தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் நடத்திய உள்ளிருப்புப் போராட்டம் சட்ட விரேதமானது என்று அறிவிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
"தில்லி அரசுக்கு ஒத்துழைக்காமல் செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு ஜன் 11 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை துணைநிலை ஆளுநர் இல்லத்தில் உள்ள வரவேற்பு அறையில் முதல்வர் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, தில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ஹரிநாத் ராம் என்பவர் வழக்குரைஞர் சசாங்க் சுதி என்பவர் மூலம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
அதில், "முதல்வர் கேஜரிவாலின் உள்ளிருப்பு போராட்டத்தால் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி உறுதி மொழி எடுத்துக் கொண்ட முதல்வர் கேஜரிவால், துணைநிலை ஆளுநர் அலவலகத்தில் அமர்ந்து துணைநிலை ஆளுநரை மிரட்டும் வகையில் செயல்படுகிறார். இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. ஆகையால் கேஜரிவால் மேற்கொண்ட உள்ளிருப்பு போராட்டம் சட்ட விரோதமானது; அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி அமர்வு, "தில்லி முதல்வர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகிறார். நீங்கள் உச்சநீதிமன்றம்தான் அனைத்தையும் தடுத்த நிறுத்த வேண்டும் என்று கூறுவதா?' என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.