கிழக்கு தில்லியில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இருவர், மின்சாரம் தாக்கியதில் தீக்காயமடைந்தனர்.
இது குறித்து கிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையர் பங்கஜ் சிங் கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்துள்ளது. கிழக்கு தில்லி, டிடிஏ பூங்காவில் இரண்டு சிறுவர்களும் விளையாடிக் கொண்டிருந்தனர். பாலித்தீன் பையில் கற்களை கட்டி, அதை கயிறுடன் இணைத்து மேலே வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கயிறில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிறுவர்கள் இருவரும் தீக்காயமடைந்தனர். இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று இரண்டு சிறுவர்களையும் மீட்டு சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு சிறுவர்களுக்கும் 12 வயதாகிறது. ஒரு சிறுவனுக்கு 40 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.