சங்கிலி பறிப்பு, திருட்டு உள்பட 17 வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞர் லாஜ்பத் நகர் பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் கூறியதாவது: தில்லி கால்காஜி பகுதியில் அண்மையில் மோட்டார்சைக்கிள் ஒன்று திருட்டுப் போனது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்தத் திருட்டு வழக்கில் தொடர்புடையவரின் நடமாட்டம் குறித்து போலீஸுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அவரைப் பிடிப்பதற்கு தனிப் படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் தொடர்புடைய குர்விந்தர், தென்கிழக்கு தில்லியில் உள்ள லாஜ்பத் நகரில் அண்மையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தில்லி உள்பட பல்வேறு இடங்களில் சங்கிலி திருட்டு, திருட்டு உள்பட 17 வழக்குகளில் அவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர் மீது அமர்காலனி காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.