தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான கேஜரிவாலின் மகளைக் கடத்தப் போவதாக அவரது அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த பிகார் இளைஞர், தில்லியில் கைது செய்யப்பட்டார்.
தனது மன நலப் பிரச்னைக்கு சிறப்பான மருத்துவ வசதியைப் பெறும் நோக்கில் இதனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது:
இந்த விவகாரத்தில் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள விகாஸ் ராய் (24), பிகார் மாநிலம் சமஸ்திபூரைச் சேர்ந்தவர். பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தில்லியில் தங்கிப் படித்து வருகிறார். தில்லி முதல்வரின் அலுவலகத்துக்கு இ-மெயிலை அனுப்பிய விகாஸ் ராய், பின்னர் உ.பி. மாநிலம் ராபரேலியில் உள்ள சகோதரியின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். பின்னர் அவரை தில்லியில் கைது செய்து விசாரித்ததில், மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு தில்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. தனது மன நலப் பிரச்னைக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை பெறும் நோக்கில் அந்த மெயிலை கேஜரிவாலின் அலுவலகத்துக்கு அனுப்பியதாக அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிகார் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இ-மெயில் அனுப்புவதற்குப் பயன்படுத்திய அவரது செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஎன்றார் அந்த அதிகாரி.